பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவர்கள் காப்பியடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்து தேர்வு மையங்களிலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்கி, பொது கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்வுகள் நடக்கும்போது, எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் கூட,மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க முடிவதில்லை என்ற ஆதங்கம்,தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு எப்போதும் உண்டு. இனி மாணவர்கள் காப்பியடிப்பது அவ்வளவு எளிதல்ல. காப்பியடித்தாலும் சிக்குவது சுலபம்.
வரும் மார்ச்சில், ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கவுள்ளது. இதில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, தேர்வு மையங்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்கி, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வித்துறையின் புதிய உத்தரவால், சில குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் மையங்களில், குறைந்தபட்சம், 10 - 12,பிளாக்குகள் இருக்கும். ஒரு, பிளாக்கில், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 20ஆயிரம் ரூபாய் செலவாகும்.
தேர்வு மையத்தின் அனைத்து பிளாக்குகளிலும், கேமராக்கள் பொருத்த வேண்டுமானால், 2.5 லட்சம் ரூபாய் செலவாகும். தனியார் பள்ளிகளில், கேமராக்கள் பொருத்துவதற்கான செலவை, அப் பள்ளிகளே ஏற்கின்றன. ஆனால், அரசு பள்ளிகளுக்கு, தேசிய நடுநிலை கல்வி திட்டத்தின் கீழ், வெறும், 20 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே நிதியுதவி கிடைக்கிறது. இந்த நிதியுதவியை கொண்டு, அனைத்து தேர்வு மையங்களுக்கும் கேமராக்கள் பொருத்துவது சாத்தியமில்லை. இப்பிரச்னைக்கு என்ன தீர்வு என்று அரசு,இதுவரை தெளிவுபடுத்தவில்லை.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் கேமராக்கள் பொருத்த வேண்டுமென்று, கடந்த ஆண்டு கல்வித்துறை உத்தரவிட்டிருந்தும் பயனில்லை. நடப்பாண்டு கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பணத்துக்கு என்ன செய்வது என்று, அரசு பள்ளி நிர்வாகங்கள் கையை பிசைகின்றன.
No comments:
Post a Comment