Saturday, June 27, 2015

உடனடித் தேர்வு: தேர்வர்கள் அலைக்கழிப்பா?


பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டதால், தேர்வர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. இருப்பினும், இதற்கு கல்வித் துறையினர் உரிய விளக்கத்தை அளித்தனர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான உடனடித் தேர்வு எழுதுவோருக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்வின்போது தேர்வு மைய நுழைவுச் சீட்டில் குறிப்பிட்ட தேர்வு மையத்துக்குச் சென்ற தேர்வர்களுக்கு, மையம் மாற்றியமைக்கப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டது. இதனால், உரிய மையத்தை தேடி அலைந்து தேர்வர்கள் காலதாமதமாகச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து செங்கல்பட்டு கல்வி மாவட்ட அலுவலர் வேதாசலத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:உடனடித் தேர்வு புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட இருந்தது. அங்கு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவதால், அந்தப் பள்ளியில் தேர்வு எழுத இருந்தவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளிக்கு தேர்வு எழுதுமாறு மாற்றியமைக்கப்பட்டது.
இருப்பினும், 7 மாணவர்களுக்கு மட்டும் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி எனக் குறிப்பிட்டிருந்தது. அவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரை மணி நேரம் தாமதம் ஆனதால், கூடுதலாக நேரம் அளிக்கப்பட்டது.ஒருவருக்கு மதுராந்தகத்தில் தேர்வு எழுத நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டது. அவர் பல்லாவரத்தில் இருந்து தேர்வு மையத்துக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாகச் சென்றதால், அனுமதிக்கப்படவில்லை. அவர் செங்கல்பட்டு ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்துக்கு வந்து, தன்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை எனக் கூறியதால் தேர்வு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Friday, June 12, 2015

பத்தாம் வகுப்பு: 18, 19-இல் அறிவியல் செய்முறைத் தேர்வு


பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வின் அறிவியல் செய்முறைத் தேர்வு ஜுன் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி:
கடந்த மார்ச் 2015-இல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், அறிவியல் பாட பயிற்சி வகுப்புக்கு வருகை புரிந்து ஆனால் செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளத் தவறிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு வரும் ஜூன் 18,19-ஆம் தேதிகளில் சிறப்புத் துணைத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறும்.
இதுகுறித்த முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்

Thursday, June 11, 2015

10ம் வகுப்பு செய்முறை வகுப்புக்கு பதிவுப்பணி


பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க தனித்தேர்வர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் இம்மாத இறுதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்யவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும், 2015-16ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளில் செய்முறை பயிற்சியில் பங்கேற்காத மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. நேற்று முதல் பெயர் பதிவுப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.பதிவு பணிகள் முடிந்த பின், மாவட்ட கல்வி அலுவலரால் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அந்தமையங்களுக்கு தொடர்ந்து சென்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். பயிற்சி வகுப்புகளில், 80 சதவீத வருகை பதிவு இருக்கவேண்டியது கட்டாயம். இதற்கான விண்ணப்பத்தை, www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.