Tuesday, December 15, 2015

நேரடியாக இறுதி தேர்வு நடத்த கோரிக்கை: அரையாண்டு தேர்வு ரத்தாகுமா?


வடகிழக்கு பருவ மழையால், மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அரையாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வக்கீல் ஒருவர் கடிதம் கொடுத்தார். இந்த கடிதத்தை மனுவாக கருதி விசாரிப்பது குறித்து முடிவு செய்வதாக முதல் டிவிசன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்கே.கவுல், புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, மாற்றுத்திறனாளி வக்கீல் முகமது நசரூல்லா ஆஜராகி ஒரு மனுவை நீதிபதிகளிடம் கொடுத்தார்.
அந்த மனுவில், “தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக
பாதிப்பட்டுள்ளன. குடிநீர், உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பெற மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் ஒரு மாதங்களுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் புத்தகங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. பலரது புத்தகங்கள் மழையில் நனைந்து, சிதைந்துள்ளது. எனவே, இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பாமல் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அரையாண்டு தேர்வை தமிழக அரசு நடத்தினால், அந்த மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த கல்வியாண்டில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வை நடத்தக் கூடாது . நேரடியாக இறுதியாண்டு தேர்வை நடத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அதன் பின்னர், வக்கீல் முகமது நசரூல்லா, இந்த மனுவின் அடிப்படையில் இந்த கோர்ட் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு பதிவு செய்து விசாரித்து, அரசுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார். இந்த மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த மனுவை வழக்காக பதிவு செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினர்.

10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள்


தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு (பிளஸ் 2) தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைதோறும் அரசுப் பள்ளிகள் செயல்படும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்ற வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளி நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ஓரிரு நாள்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Saturday, December 12, 2015

10ம் வகுப்பு பெயர் பட்டியல்; டிச.,15 வரை கால அவகாசம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வுப்பட்டியல் தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அதற்கெனவழங்கப்பட்ட மென்பொருளில் தயார் செய்து வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.
அப்பணிகளை நவ., 30 முதல் டிச., 9ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மழையால் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால், டிச., 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிழைகள் இன்றி, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை தயார் நிலையில் வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

Thursday, December 10, 2015

10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் செய்முறை பயிற்சி திருத்தியமைப்பு: இயக்குநர் உத்தரவு


நடப்பு கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
நடைமுறையிலுள்ள 10ம் வகுப்பு அறிவியல் பாட நூலின் 2015ம் கல்வியாண்டிற்கான திருத்திய பதிப்பில் பாடநூல் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் ஆலோசனையின்படி பாடநூல் தயாரிப்பு குழு அறிவியல் செய்முறை பயிற்சிகளை திருத்தியமைத்தது.
திருத்தியமைக்கப்பட்ட செய்முறை பயிற்சிக்கான பட்டியல் நடப்பு கல்வியாண்டிற்கான தமிழ் வழி அறிவியல் பாடநூல் செய்முறை பயிற்சிகள் பகுதி-1 மற்றும் 2ல் பக்க எண் 326, 345லும், ஆங்கில வழிக்கான செய்முறை பயிற்சிகள் பகுதி-1 மற்றும் 2ல் பக்க எண் 311, 332லும் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திருத்தியமைக்கப்பட்ட செய்முறை பயிற்சிகளின்படி கற்பிக்கவும், இதனை கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.