Tuesday, December 15, 2015

நேரடியாக இறுதி தேர்வு நடத்த கோரிக்கை: அரையாண்டு தேர்வு ரத்தாகுமா?


வடகிழக்கு பருவ மழையால், மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அரையாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வக்கீல் ஒருவர் கடிதம் கொடுத்தார். இந்த கடிதத்தை மனுவாக கருதி விசாரிப்பது குறித்து முடிவு செய்வதாக முதல் டிவிசன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்கே.கவுல், புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, மாற்றுத்திறனாளி வக்கீல் முகமது நசரூல்லா ஆஜராகி ஒரு மனுவை நீதிபதிகளிடம் கொடுத்தார்.
அந்த மனுவில், “தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக
பாதிப்பட்டுள்ளன. குடிநீர், உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பெற மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் ஒரு மாதங்களுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் புத்தகங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. பலரது புத்தகங்கள் மழையில் நனைந்து, சிதைந்துள்ளது. எனவே, இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பாமல் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அரையாண்டு தேர்வை தமிழக அரசு நடத்தினால், அந்த மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த கல்வியாண்டில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வை நடத்தக் கூடாது . நேரடியாக இறுதியாண்டு தேர்வை நடத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அதன் பின்னர், வக்கீல் முகமது நசரூல்லா, இந்த மனுவின் அடிப்படையில் இந்த கோர்ட் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு பதிவு செய்து விசாரித்து, அரசுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார். இந்த மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த மனுவை வழக்காக பதிவு செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினர்.

No comments:

Post a Comment