Saturday, June 27, 2015

உடனடித் தேர்வு: தேர்வர்கள் அலைக்கழிப்பா?


பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டதால், தேர்வர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. இருப்பினும், இதற்கு கல்வித் துறையினர் உரிய விளக்கத்தை அளித்தனர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான உடனடித் தேர்வு எழுதுவோருக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்வின்போது தேர்வு மைய நுழைவுச் சீட்டில் குறிப்பிட்ட தேர்வு மையத்துக்குச் சென்ற தேர்வர்களுக்கு, மையம் மாற்றியமைக்கப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டது. இதனால், உரிய மையத்தை தேடி அலைந்து தேர்வர்கள் காலதாமதமாகச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து செங்கல்பட்டு கல்வி மாவட்ட அலுவலர் வேதாசலத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:உடனடித் தேர்வு புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட இருந்தது. அங்கு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவதால், அந்தப் பள்ளியில் தேர்வு எழுத இருந்தவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளிக்கு தேர்வு எழுதுமாறு மாற்றியமைக்கப்பட்டது.
இருப்பினும், 7 மாணவர்களுக்கு மட்டும் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி எனக் குறிப்பிட்டிருந்தது. அவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரை மணி நேரம் தாமதம் ஆனதால், கூடுதலாக நேரம் அளிக்கப்பட்டது.ஒருவருக்கு மதுராந்தகத்தில் தேர்வு எழுத நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டது. அவர் பல்லாவரத்தில் இருந்து தேர்வு மையத்துக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாகச் சென்றதால், அனுமதிக்கப்படவில்லை. அவர் செங்கல்பட்டு ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்துக்கு வந்து, தன்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை எனக் கூறியதால் தேர்வு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment