Thursday, March 30, 2017

சமூக அறிவியலில் ’சென்டம்’ அதிகரிக்கும்

’பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் தேர்வு எளிதாக இருந்ததால்,இந்த ஆண்டு ’சென்டம்’ பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்,’ என, ஆசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அவர்களின் கருத்து:

எஸ்.சக்திவேல்,மாணவர், கே.ஆர்.மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை: கேள்விகள் எளிமையாக இருந்தன. 24 ஒரு மதிப்பெண் வினாக்களில் ஒன்று மட்டுமே சிந்திக்கும் வகையில் இருந்தது. மற்றவை பயிற்சி வினாக்களில் இருந்து அப்படியே வந்திருந்தன. 

ஆசியா, இந்தியா மேப்பில் கொடுக்கப்பட்ட 10 வினாக்களும் ஏற்கனவே பலமுறை கேட்கப்பட்டவை. அதேபோல் புவியியல் மேப்பும் எளிதாக இருந்தது. 5 மதிப்பெண் வினாக்களில் ’சாய்சில்’ விட மனசில்லாதபடி அனைத்து கேள்விகளும் மிக எளிதாக இருந்தன. நுாறு மதிப்பெண்கள் பெறுவது எளிது.

ஆர்.கார்த்திகா, மாணவி,புதுவயல் வித்யாகிரி மெட்ரிக்.,மேல்நிலை பள்ளி: எதிர்பார்த்த வினாக்கள் வந்தன. முந்தைய ஆண்டு தேர்வு வினாத்தாள்களில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அதிகம் இடம் பெற்றிருந்தன. 

பொருத்துகவில் ஒரு சில மட்டும் புத்தகத்தின் உள்பகுதியில் கேட்கப்பட்டிருந்தது. வரைபடத்தை பொறுத்தவரை இடம் குறித்தல் எளிதாக இருந்தது. அதில் முழுமதிப்பெண் பெறலாம். 2 மதிப்பெண் வினாவும் எளிதாகவே கேட்கப்பட்டிருந்தது.

வி.முத்துப்பாண்டி, ஆசிரியர்,அரசு உயர்நிலைப்பள்ளி, வேதியரேந்தல், சிவகங்கை: அனைத்து வினாக்களும் ’புளுபிரின்ட்’ படி கேட்கப்பட்டிருந்தன. பாடப்புத்தக பின்பக்க பயிற்சி வினாக்களில் இருந்து 99 சதவீதம் வந்திருந்தன. 

ஒரு மதிப்பெண் வினாவில் ஒன்று மட்டும் புத்தகத்தில் உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டது. அதுவும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தான் இருந்தது. இந்த ஆண்டு அதிக மாணவர்கள் ’சென்டம்’ பெறுவர். 

சாதாரண மாணவர் கூட 80 மதிப்பெண்கள் பெறமுடியும். மேப், காலக்கோடு, 5 மதிப்பெண் வினாக்களில் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளே அதிகம் இடம் பெற்றிருந்தன.

பிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்
”நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்,” என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: 

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை, இரு மாதங்களில் மாற்ற முடியாது. ஆனால், பாடத்திட்டத்தில் தேவையில்லாத பகுதிகளை அகற்றிவிட்டு, புதிய பகுதிகள் இணைக்க முடியும். அதற்காக, கல்வியாளர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் குழுவுடன், ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான, ’நீட்’ தேர்வை சிரமமின்றி மாணவர்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு, பாடத்திட்டத்தில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

’பள்ளிக்கல்வியின் இந்த அறிவிப்பால், எதிர்காலத்தில், ’நீட்’ தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்களும் எழுதி, உயர்கல்வி வாய்ப்புகளை பெற முடியும்’ என, பெற்றோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment